எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 24, 2011

தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள்

தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதனால், விதிமுறை மீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


* பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினாலோ அல்லது இறையாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற்றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டினால், தமிழ்நாடு, பொது இட சீர்குலைப்பின் பிரிவு- 2-4(ஏ) ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை கட்சிகள் வினியோகிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-171.(பி) ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* வாக்காளர்களுக்கு உணவு மற்றும் மது வினியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-123, 151 மற்றும் 135.(சி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்த கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசாரத்தின் போது வெளியிடப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிட்டால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-127.(ஏ) ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி சீட்டு பெற்று, அதை வாகனத்தின் முன் ஒட்டியிருக்க வேண்டும். மீறினால், இந்திய தண்டனை சட்டம், பிரிவு-171.(எச்) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

* தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தாலோ அல்லது வேறு விதமான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு- 171.(டி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் வரும், ஏப்ரல் மாதம் 11ம் தேதி மாலை 5மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது, பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-126 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

* வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். இதை, மீறுபவர்கள் மீது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-130 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1 comment:

Anonymous said...

தேர்தல் விதுமுறைகள் கடுமையாக அமலடுத்தப்படுவதால்
அடிப்போயியுள்ளனர் அரசியல்வாதிகள்.