எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, June 21, 2010

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.

வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர்

No comments: