எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, June 23, 2013

காங்கிரஸ் கமிட்டி மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், தமிழக காங்கிரசாருக்கு, முக்கிய பதவியான, பொதுச் செயலர் பதவியை வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியும் சாராமல், செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகிய, மூவருக்கு மட்டும், அகில இந்திய காங்., செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பதவி கிடைக்காத கோஷ்டித் தலைவர்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸினிக் பொறுப்பேற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்த, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இணைந்த போது, அவர் தேசிய செயலர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வகித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக, அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்ததால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். சமீபத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மகள் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ஜ., கட்சியில், அகில இந்திய செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், பா.ஜ.,விலிருந்து, காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார், கடந்த, 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் வன வாசத்தை அனுபவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனியின் தயவால், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை பெற்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வகித்து வரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், மீண்டும் அதே பதவியில் நீடிக்க, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காரணமாக இருந்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இளைய தலைமுறை எம்.பி.,க்களில், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகிய மூவரும் தங்களுக்கு, முக்கிய பதவியான, அகில இந்திய பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், மூவருக்கும் எந்த பதவியும் வழங்கவில்லை.
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மட்டும், பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்களுக்கும், அகில இந்திய அளவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, முகுல் வாஸினிக் இரு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை முகுல் வாஸினிக் தயாரித்து தான் வர வேண்டும் என்றால், இன்னும் ஓராண்டு வரை பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை. காரணம், அவரது செயல்பாடு வேகமாக இருக்காது என்ற கருத்து, கட்சியின் மத்தியில் நிலவுகிறது.
அதேசமயம், குலாம்நபி ஆசாத், தயாரித்து வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியல் என்றால், இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளிவந்து விடும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு முதன்முறையாக முகுல் வாஸினிக் வரவுள்ளார்

Monday, June 17, 2013

எட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார்

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் கட்சியில், நேற்று முன்தினம், அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரவையிலும், நேற்று மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த, சுதர்சன நாச்சியப்பன் உட்பட, எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகியுள்ள காங்கிரஸ், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும், பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.மத்திய அமைச்சர்களாக இருந்த, சி.பி.ஜோஷி, அஜய் மேகன், நேற்று முன்தினம், ராஜினாமா செய்தனர்; அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இது தவிர, காங்., கட்சிக்கு, 42 செயலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தேர்தலுக்கு தயாராகும் வகையிலான, பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தி.மு.க., திரிணமுல் காங்., போன்ற, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த கட்சிகள் சார்பில், அமைச்சர்களாக இருந்தவர்கள், ராஜினாமா செய்தனர். இதனால், பல இலாகாக்களுக்கு, அமைச்சர்கள் இல்லாமல் இருந்தனர். அமைச்சரவையில் இருந்த சிலர், கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டதாலும், அமைச்சரவையில், காலி இடங்கள் அதிகரித்தன. இதையடுத்து, அமைச்சரவையில், நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில், நேற்று மாலை நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர், மன்மோகன் சிங், காங்., தலைவர், சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், சிஸ்ராம் ஓலா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், கே.எஸ்.ராவ் கேபினட் அமைச்சர்கள்.மாணிக்ராவ் கேவிட், சந்தோஷ் சவுத்ரி, சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி.சீலம் இணை அமைச்சர்கள்.எளிமையாக நடந்த, இந்த விழா, 20 நிமிடங்களில் முடிந்தது. அமைச்சர்களாக பதவியேற்றவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வாழ்த்து பெற்றனர்.தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, இலாகா மாற்றப்பட்டது; அவர், ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கேபினட் அமைச்சர்கள்:

கேபினட் அமைச்சராக பதவியேற்ற, சிஸ்ராம் ஓலாவுக்கு, 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானின் சுஞ்சுனு தொகுதியில், போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், யாரும் முன்வரவில்லை. இதனால், வேட்பாளர் கிடைக்காமல், பா.ஜ., திண்டாடியது; அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.கர்நாடகாவைச் சேர்ந்த, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.மு., கூட்டணி அரசில், முதல் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, கிரிஜா வியாசுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்கப்பட்டுள்ளது. இவர், தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர்.ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த, கே.எஸ். ராவ், ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில், தெலுங்கானா கோஷம் வலுத்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவாக, இவர் குரல் கொடுத்து வருவதால், அமைச்சரவையில், இவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்கள்:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுதர்சன நாச்சியப்பன், வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த, மாணிக்ராவ் கேவிட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பஞ்சாபை சேர்ந்த, சந்தோஷ் சவுத்ரிக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பஞ்சாப் மாநில காங்., கில், அனுபவம் வாய்ந்த, பெண் தலைவர்; தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, சீலம், நிதித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் உள்ள, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் யார்:


மாணிக் ராவ் கவித்: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பாரில், 1934, அக்.29 ல், மாணிக் ராவ் கவித் பிறந்தார். காங்., கட்சி சார்பாக, நந்துர்பார் லோக்சபா தொகுதியில் இருந்து, 1980ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி சுரேகா மாணிக்ராவ் கவித். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். உள்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர் பொறுப்புகள் வகித்துள்ளார்.

ஜே.டி.சீலம்: ஜே.டி.சீலம், ஆந்திரா குண்டூர் மாவட்டம் புசூலூர் கிராமத்தில் 1953, ஆக.,13ம் தேதி பிறந்தவர். காங்., கட்சியில் இணையும் முன், 1984-99ம் ஆண்டுவரை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்தவர். மகாத்மா காந்தி குடும்பத்தாருடன், நெருங்கிய தொடர்பு உடையவர். இவரது மனைவி சுஜாதா சீலம். ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்தோஷ் சவுத்ரி: பஞ்சாப், ஹோஷியார்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து, சந்தோஷ் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவர். முதல்முறையாக, 1992 ல், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1992, 1999, 2009 ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

கே.எஸ்.ராவ்: ஆந்திரா, மச்சிலிபட்டினத்தில் 1943 அக்.,2 ல், கே.எஸ்.ராவ் பிறந்தார். முழுப்பெயர், காவுரு சாம்பசிவ ராவ். மனைவி ஹேமலதா; ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். லோக்சபாவுக்கு, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபராக இருந்து, அரசியல்வாதியானவர்.

புதிய அமைச்சர்கள் பின்னணி



சுதர்சன நாச்சியப்பன் : இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் 1947, செப்.29ம் தேதி பிறந்தார். இவரது தந்தை என்.வி.மாதவன், தாயார் சேதுராஜம் தங்கம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலும், மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ.,வும், பிஎச்.டி.,யும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றார். டில்லி சுப்ரீம் கோர்ட்டில் சில காலம் வக்கீலாக பணியாற்றினார். இவரது மனைவி தேவகி. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவரது தாத்தா, காங்., கட்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர். சுதர்சன நாச்சியப்பன் 1969ல் காங்., கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1989 சட்டசபை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார்; 1999 ல், சிவகங்கை தொகுதியில், நிதி அமைச்சர் சிதம்பரத்தை (அப்போதைய த.மா.கா.,) தோற்கடித்து, லோக்சபாவுக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2010 ம் ஆண்டுகளில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு பெற்றார்.

சிஷ்ராம் ஓலா:ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் 1927, ஜூலை 30ம் தேதி சிஷ்ராம் ஓலா பிறந்தார். பிறந்த தொகுதியிலிருந்தே லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-90ம் ஆண்டு வரை ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினராக விளங்கினார். சிறப்பாக சமூகப்பணி ஆற்றியதற்காக 1968ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 1996ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, உரத்துறை அமைச்சர் ஆனார். நீர்வளத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும் அமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் பிஜேந்தர் ஓலா, ஜூன்ஜூனு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருக்கிறார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் : கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1941, மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பிறந்தார். முதன்முறையாக லோக்சபாவுக்கு 1980ம் ஆண்டு உடுப்பி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சி சார்பாக லோக்சபாவுக்கு 1980, 84, 89, 91, 96 ஆகிய ஆண்டுகளிலும், ராஜ்யசபாவுக்கு 1998, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிவிவகாரத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கிரிஜா வியாஸ்:ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்த் லோக்சபா தொகுதியிலிருந்து பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிஜா வியாஸ். அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முகம் கொண்டவர். மூன்று கவிதை தொகுப்புகளையும், ஐந்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்தார். முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தொகுதியிலிருந்து, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ம் ஆண்டு வரை, மாநில அமைச்சராக பணியாற்றினார். 1991ம் ஆண்டு உதய்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றிபெற்று பார்லிமென்ட் சென்றார்.

நான்காண்டுகளில் 6 ரயில்வே மந்திரிகள் :

ரயில்வே அமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த நான்காண்டுகளில், ஆறாவது ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது ஆட்சியில், கடந்த நான்காண்டுகளில், ஆறு ரயில்வே அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆறு அமைச்சர்களில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள், மூன்று பேர். அவர்கள், மம்தா பானர்ஜி, தினேஷ் திரிவேதி மற்றும் முகுல் ராய்.அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வசம் அத்துறை மாறியது. சி.பி.தாக்கூர் வசம், கூடுதலாக இருந்த அத்துறை, பின்னர், பவன்குமார் பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊழல் முறைகேட்டில் அவர் சிக்கியதை அடுத்து, இப்போது, மல்லிகார்ஜுன கார்கே, புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தில் மீனாட்சிக்கு இடமில்லை:

மத்திய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சி நடராஜன் எம்.பி.,க்கு இடம் கிடைக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு மிக நெருக்கமானவர், மீனாட்சி நடராஜன். காங்கிரஸ் செயலராக உள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவர், கடந்த லோக்சபா தேர்தலில், மாண்சார் தொகுதியில், 1971ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த, பா.ஜ., பிரமுகர் லட்சுமி நாராயண் பாண்டேவை வீழ்த்தினார்.இதன் மூலம் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதனால், ராகுலின், காங்., இளம் படை வட்டாரத்தில், செல்வாக்கு பெற்றிருந்தார்.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது, பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.

Thursday, May 30, 2013

மத்திய அரசால் அமைக்கப்படும் ” அல்ட்ரா மெகா பவர் “ திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, எட்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. அது போல், உடன்குடி அனல் மின் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் தற்போதைய மின் பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வரும் நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், இரண்டு முக்கிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு, ”ற்றுச்‹ழல் அனுமதி கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை ஒட்டி அமைந்த செய்யூர் பகுதியில், 1995ம் ஆண்டில், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம் அமைக்க, பிரபல பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., களம் இறங்கியது.ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, தன் "கோல்ப்' விளையாட்டு மைதானம், அந்தத் திட்டத்தால் பாதிப்படையும் என கருதியதால், அந்த அனல் மின் நிலையத்தை, அமைய விடாமல் தடுத்து விட்டது.

கடந்த, 2005ம் ஆண்டு, நாடு முழுவதும், ஐந்து இடங்களில், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்கப் படும் என, மத்திய அரசுஅறிவித்தது. அதில் ஒன்று, தமிழகத்திற்கும் கிடைத்தது. செய்யூர் பகுதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த, 20ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்கான, ஆவணங்களை, மத்திய மின்சார அமைச்சகம் தயார் செய்து கொண்டிருக்கிறது. திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிவிவரங்களை தொகுத்து அந்த ஆவணம் தயாராகி வருகிறது.தனியார் நிறுவனத்துடன் இணைந்து தான், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, அந்த தனியார் நிறுவனம் எது என்பதை தேர்வு செய்து, தேவையான நிதி விவரங்களை இறுதி செய்து, அதன் பிறகு தான் பிற வேலைகள் ஆரம்பமாகும். இவை எல்லாம் ஒழுங்காக நடைபெற்றாலும் கூட, திட்டத்தை செயல்படுத்த, எப்படியும், மூன்று
அல்லது நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும்.தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை, 4,000 மெகா வாட் என இருக்கும் நிலையில், இதை பூர்த்தி செய்ய, இந்தசெய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆட்சியாளர்கள், ஆர்வமும், வேகமும் காட்டினால் மட்டுமே, இது சாத்தியமாகும்.

உடன்குடிக்கும் "ஓகே':தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படுவதற்கான வகையில், உடன்குடியில், 1,600 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது.திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில், அனல் மின் நிலையம் அமைக்க, கடந்த 2006ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது; அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியமும், "பெல்' நிறுவனமும் இணைந்து, திட்டம் நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.

உடன்குடியில், 800 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகளை அமைப்பது எனவும், 1,600 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும், பாய்லர்களை தயாரித்து அளிக்கும் திருச்சியில் உள்ள, "பெல்' நிறுவனம், கடந்த, ஆறு ஆண்டுகளாக உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து, கடந்தாண்டு, "பெல்' நிறுவனத்தை, தமிழக அரசு நீக்கிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து, தமிழக அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த


திட்டத்தை ஆரம்பிக்க தேவையான,சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த, 10ம் தேதி, உடன்குடி அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.

கடலூரில் எப்போது?: மத்திய மின்சாரத்துறை அமைச்சராக, சுஷில்குமார் ஷிண்டே இருந்த போது, தமிழகத்துக்கு மேலும் ஒரு, "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தை கடலூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டம் குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் முறையிட்டனர்.

அப்போது, நிலம் வழங்க மாநில அரசு முன்வந்தால், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தயார் என, கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 8, 2013

கார்நாடகாவில் காங்கிரஸ் அபார வெற்றி :


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு, ஆளும் பாரதிய ஜனதாவுக்கு, நேற்று பேரிடியாக அமைந்தது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் துவங்கியுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்பது, சித்தராமைய்யாவா அல்லது மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவா என்பது, இன்று தெரியும்.
மாறி மாறி முன்னிலைவட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்த பா. ஜ.,வுக்கு, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என, தென் மாநிலங்களில் ஒன்றான, கர்நாடகாவில் ஆட்சி செய்ய, 2006ம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.
முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் புகார்கள் கூறப்பட்டதால், அவர் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வராக இருந்தார்.கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதற்காக, மாநிலம் முழுவதும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுகள் எண்ணத் துவங்கிய சில நிமிடங்களில், பா.ஜ.,வும், அடுத்த சில நிமிடங்களில், தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும், மாறி மாறி முன்னிலையில் வந்தன.
அறுதிப் பெரும்பான்மை
காலை, 9:00 மணியளவில் முன்னிலை பெறத் துவங்கிய காங்கிரஸ், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான, 113 இடங்களுக்கும் மேலாகப் பெற்றது.
மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்து விட்டதால், தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுகள் பதிவான தொகுதிகளுக்கு நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்ற காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவு, சில பெரிய தலைவர்களுக்கு, தோல்வியை அளித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, மாநில, பா.ஜ., தலைவர், ஈஸ்வரப்பா, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம், தொழில்துறை அமைச்சராக இருந்த, நிரானி போன்றோர், தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக்கட்சி துவக்கி, ஓட்டுகளைப் பிரித்து, பா.ஜ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்திய எடியூரப்பா, முடிவுகளைப் பார்த்த உடன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வர் கனவில் மிதந்த, முன்னாள் முதல்வர் குமாரசாமி என, பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.,வின் ஆதிக்கம் மிகுந்த, தக்ஷிண கன்னடா, உடுப்பி, பெல்லாரி போன்ற பகுதிகளிலும், அந்தக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில், காங்கிரஸ் வளர்ச்சி அமோகமாக இருந்ததை, முடிவுகளில் காண முடிந்தது.
சித்தராமைய்யாவுக்கு சிக்கல்
முடிவுகள் வெளியானதும் எழுந்த கேள்வி, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். ஏனெனில், தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என, காங்கிரஸ் அறிவிக்கவில்லை. முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, தனக்குத் தான் அந்தப் பதவி என கூறி வந்தார்.இந்நிலையில், நேற்று திடீரென, மத்திய அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, "நானும் போட்டியில் உள்ளேன்' என அறிவித்து, சித்தராமைய்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தோல்வி அடைந்துள்ளதால், இப்போதைக்கு போட்டி, சித்தராமைய்யாவுக்கும், கார்கேவுக்கும் தான்.
கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்; சித்தராமையா, சிறுபான்மை குறும்பர் இனத்தை சேர்ந்தவர். மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான, ஒக்காலிகா, லிங்காயத்தை சேர்ந்த யாரும், முதல்வர் வேட்பாளர் பட்டியலில், நேற்று இரவு வரை இல்லை.கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் புது முதல்வர் யார் என்பது, இன்று தெரிய வரும். அது போல், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறப் போவது, பா.ஜ.,வா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமா என்பதும் தெளிவாகிவிடும்.


ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா
சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.நேற்று மதியம், கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெதீஷ் ஷெட்டர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, கவர்னர் பரத்வாஜ், புதிய அரசு அமையும் வரை, தற்காலிக முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாதி வெற்றி
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, கர்நாடக மாநிலத்தில், முதல் முறையாக வெற்றி பெற்று, கணக்கை துவக்கியுள்ளது.
சென்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதியின், சி.பி.யோகேஸ்வரா, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான, குமாரசாமியின் மனைவி, அனிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
யோகேஸ்வராவுக்கு ஆதரவாக, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவிக்கு கார்கே போட்டி
""கட்சி மேலிடம் அனுமதித்தால், முதல்வர் பதவிக்கு போட்டியிட தயார்,'' என, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான, மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. அதன் படி போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன். அது போல், கர்நாடக முதல்வராக வேண்டும் என, கட்சி கேட்டுக் கொண்டால், அந்த உத்தரவை பணிந்து செயல்பட தயாராக உள்ளேன்.
எனினும், நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், மாநில முதல்வர் பதவியை வகிக்க விரும்பவில்லை. அந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் என கட்சி மேலிடம் தெரிவித்தால், ஏற்கத் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கடும் அதிர்ச்சி
கர்நாடகாவில், பாரதிய ஜனதா, ஆட்சியைஇழந்துள்ளதால், அதன் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ்பிரதாப் ரூடி கூறும் போது,""எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. தோல்வி எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாமும் சேர்ந்து, எங்களை பாதித்து விட்டது,'' என்றார்.


நடிகை பூஜா காந்தி படுதோல்வி

டூ ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக மாநில தலைவர், எச்.டி.குமாரசாமி, வெற்றி பெற்றார். அவரை அடுத்து வந்த, காங்கிரஸ் வேட்பாளர், மாரித்தேவரை விட, 25 ஆயிரம் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.பரமேஸ்வரா தோல்வி அடைந்தார். கரடகெரே தொகுதியில் போட்டியிட்ட அவர், 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்றிருந்தால், முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருப்பார்.டியூரப்பா கட்சி சார்பில், ராய்ச்சூர் தொகுதியில் போட்டியிட்ட, கன்னட நடிகை பூஜா காந்தி, வெறும், 1,815 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சி.எம்.இப்ராகிம், பத்ராவதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.ஜெகதீஷ் ஷெட்டர் அரசில், அமைச்சர்களாக இருந்தவர்களில், 12 பேர் படுதோல்வி அடைந்தனர்.

Thursday, March 28, 2013

கலைஞர் விளக்கம் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழர் விவகாரத்தில்


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
திமுக தீர்மானம் கண்துடைப்பு என்றால் அதிமுக தீர்மானம் ஓரங்க நாடகமா?சென்னை : இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என்றால் அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஓரங்க நாடகமா என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களாக சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், அங்கே திமுகவினரை வாய் திறந்து கருத்து தெரிவிக்க விடாமல் ஆளும் கட்சி தங்களது மெஜாரிட்டியை கொண்டு விருப்பம் போல் பேசியும் வெளியேற்றியும் வருவதையும், முதலமைச்சர் பதிலுரை என்ற பெயரால் பிரச்னையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க என்னை தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் தாக்கி தரக் குறைவாக பேச முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கி உரையாற்றுவதையும் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில் நேற்று ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கை பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் பல பக்க பேச்சை தயார் செய்து அவையில் படித்து விட்டு ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.

இலங்கைப் பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா பழி சுமத்துவது இது எத் தனையாவது முறை என்றே ஞாபகம் இல்லை. கச்சத்தீவு பிரச்னையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும், காவிரி பிரச்னையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப் போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். அந்தப் பேச்சினை ஏடுகள் பெரிதாக வெளியிடுகின்ற காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமையாகிறது.

தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டுமென்று அவர் 2009ம் ஆண்டே கூறியதாகவும், நானோ அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார் கள் என்ற தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னை சந்தித்த பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதில் எதை அவர் நாடகம் என்கிறார்? இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சி கூட்டம் என்றாலே அலர்ஜி ஆயிற்றே?) அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா?

அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று கூறியது நாடகமா?
அந்த அனைத்துக் கட்சி தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார்? ‘தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது’ என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதை தற்போது வசதியாக மறந்து விட்டுப் பேசுவதற்கு பெயர்தான் இரட்டை வேடம். நமது வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18,10&08ல் இலங்கை அதிபருடன் பேசியதும், பிறகு 24,10,08ல் சென்னையில் நாம் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியதும், 26,10,08ல் பிரணாப் சென்னை வந்து என்னை சந்தித்ததும்,

12&11&08ல் இலங்கைத் தமிழர்களுக்காக பேரவையில் நான் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும், 4,12,08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனு ப்பி பேசச் சொன்னதும், அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27,12,08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும் நாடகமா? இரட்டை வேடமா?

அதற்குப் பிறகும் திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன். ஆனால் ஜெயலலிதா பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார். திமுக தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், நேற்று ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?

ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின்படி, திமுக மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற் பட்டுவிட்டதா?
அமெரிக்கத் தீர்மானத் தில் இந்தியா திருத்தங் களைக் கொண்டு வந்து விட்டதா?
நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா?

மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது.
ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை. 2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலைதான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

அப்போதே வெளியேறியி ருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே தவிர வேறல்ல. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக இத் தனைப் போராட்டங்களையும் நடத்தியது;

அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதிக அக்கறை செலுத்துவது போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றெல்லாம் ஏதோ ஈழத் தமிழர்களுக்காக இழப்பைச் சந்தித்தவரை போல குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம் பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்த எனக்கு திடீரென்று ஞானோதயம் என்று கூறுகின்ற ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை?
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?

1956ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16,4,02ல் இதே சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?

17,1,09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறக்க முடியுமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்பதா? பேரவையில் மெஜாரிட்டி உள்ளது என்ற கித்தாப்பில் எதை வேண்டுமென்றாலும் பேசுவதா?

அடுத்து ஜெயலலிதா தன் பேச்சில் என் மீது சாற்றியுள்ள குற்றச்சாட்டு, நான் இருந்த உண்ணாவிர தத்தை பற்றி புது விளக்கத்தை சமீப காலமாக கூறுவதாகவும், போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனை நான் நம்பியதாகவும் எந்தத் தமிழரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாக நான் இதைக் கூறவில்லை. இதோ, 28,4,09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்

கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே நான் சமீபகாலமாக இதை கூறவில்லை. அன்றே வெளியான செய்தி இது. ஜெயலலிதா கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்களுக்கு இதுவும் ஓர் உதாரணம்.
திமுக பொதுச் செயலா ளர் பேராசிரியர், ‘மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகிய போதிலும், மத்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அதற்கு திமுக துணை போகாது’ என்று பேசியதை எடுத்துக்காட்டி, இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். எப்படியாவது மத்திய ஆட்சி கவிழாதா? சந்தடிசாக்கில் தான் பிரதமராகிவிட முடியாதா? என்ற நப்பாசை ஜெயலலிதாவுக்கு. அதனால் நாங்கள் செய்வதெல்லாம் துரோகமாக தெரிகிறது.

எதற்கெடுத்தாலும் நான் இரட்டை வேடம் போடுவதாக கூறுகிறார். சேது திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது வேண்டாம் என்கிறாரே, அதற்கு பெயர்தானே இரட்டை வேடம்!

காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம் என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே இரட்டை வேடம்! இன்று (28&3&13) இந்து நாளிதழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர், தமிழ் ஈழத்தின் ஆதரவாளராகியுள்ளார்’ என்ற செய்தியை படித்துப் பார்த்தால் யார் இரட்டை வேடம் போடுபவர் யார் இரட்டை முகம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.